இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

பொதுமக்களின் நலன் கருதி இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வரவேற்றனர்.
இதன் பின் வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.மேலும் ரூ.169.77 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்.
இதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தமிழக அரசு கவனமுடன் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .பொதுமக்களின் நலன் கருதி இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே இ பாஸ் பெற்று செல்ல வேண்டும்.கர்ப்பிணி, வயதானோர் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.