தொகுதி பங்கீட்டில் இழுபறி., தனி சின்னத்தில் தான் போட்டி – வைகோ அதிரடி
வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிசின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சமரசம் செய்ய திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினர். மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக அனைத்து தொகுகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என கூறியுள்ளார். எத்தனை தொகுதிகள், பொது சின்னம் என வியூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றும் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியோட அங்கீகாரத்தை பெறுவதற்காக 12 தொகுதிகள் வரை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, 8 தொகுதிகள் வெற்றி பெற்றாலே உரிய அங்கீகாரம் கிடைத்துவிடும் என பதிலளித்துள்ளார். அப்போ 8 தொகுதிகள் எதிர்பார்க்கபடுகிறதா என்ற கேள்விக்கு, நல்லதையே எதிர்பார்ப்போம் என வைகோ கூறியது, தொகுதி பங்கீட்டில் இன்னும் இழுபறி இருப்பதாக தெரிய வருகிறது.
தொடர்ந்து பேசிய அவர், மதிமுகவின் தேர்தல் அறிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்பது அறிவிக்கப்படும். அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது அவர்களுடைய உணர்வு, நியாயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.