திமுக அரசு கமிஷன், கலெக்சன், கரப்ஷனில் கண்ணும் செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளது – ஈபிஎஸ்

Default Image

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க. அரசு, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளது என ஈபிஎஸ் அறிக்கை.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிகாரிகள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்றவும், அதிகாரிகளை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆண்டுகால நல்லாட்சிக் காலத்திலும், குறிப்பாக, 2011 முதல் 2021 வரை நடந்த அம்மாவின் ஆட்சி மற்றும் அம்மாவின் அரசிலும் நேர்மையான அரசு அதிகாரிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

“கார்ப்பரேட் கம்பெனிகளின் தயவோடு, கோடிக்கணக்கில் செலவு செய்து, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க. அரசு, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது வேதனைக்குரியதாக உள்ளது.

சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கொள்ளை அடிக்கும் ஆளும் கட்சியினர் மீது, சட்டபூர்வமாக, நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், தங்களுக்கு சாதகமாக செயல்படாத அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும், ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை, எனது அறிக்கைகளின் வாயிலாகவும் அடிக்கடி சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனாலும், திருந்தாத இந்த விடியா அரசின் ஆட்சியில், தொடர்ந்து அதிகாரிகள், ஆளும் கட்சியைச் சேர்ந்த  முக்கிய பிரமுகர்களால் மிரட்டப்பட்டு வருவதுதொடர்கதையாகி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், கல்குவாரிகளில் முறைகேடாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமவளம் கடத்தப்பட்டுள்ளதை கண்டறிந்து இந்த கடத்தலில் ஈடுபட்ட ஆளும் தி.மு.க-வினருக்கு சுமார் 20 கோடி ரூபாய் அபராதம் விதித்த சப்-கலெக்டர், லாரிகளை பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும், கடத்தல் கும்பல்களின் செல்வாக்கால், மாவட்ட ஆளும் கட்சி பிரமுகர்களின் அழுத்தத்தினால், கடந்த வாரம் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம் மற்றும் இருக்கன்குடி பகுதிகளில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன. இதில் தி.மு.க. பிரமுகர்களுக்கு சொந்தமான குவாரிகளில், புவியியல் துறையில் பெறப்பட்ட நடை சீட்டு (பெர்மிட்) அளவைவிட, அதிக அளவு கனிமங்கள் வெட்டி கடத்தப்படுவதாக அரசு துறைகளுக்கு புகார்கள் வந்தன.

பொதுமக்கள் அளித்த புகாரின்படி, சேரன்மகாதேவி சப்-கலெக்டர் திரு. சிவ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மணிவண்ணன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை (Joint operation) மேற்கொண்டு, கடத்தல் லாரிகளை கனிமங்களோடு பறிமுதல் செய்ததோடு, பினாமி பெயர்களில் நடத்தும் குவாரிகளுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதித்துள்ளதாகவும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன. இதன் காரணமாகவே சப்-கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பணியிட மாறுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

சேர்ந்த அடுத்த நிகழ்வாக ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் திரு. சந்தோஷ்குமார்-ஐ ஆளும் கட்சி பிரமுகர்களும், திமுக-வைச் ஒப்பந்ததாரர்களும் செய்யாத பணிகளுக்கு போலியாக பில்கள் தயாரிக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர் என்றும், கடந்த புதன்கிழமை மதியம் (8.12.2021) ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசி மூலம் மீண்டும் அவருக்கு உச்சகட்ட நெருக்கடி கொடுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் உச்சத்தில், உதவிப்பொறியாளர் திரு. சந்தோஷ்குமார் காவல்கிணறு அருகே உள்ள இரயில்வே தண்டவாளத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.

உதவிப் பொறியாளர் சந்தோஷ்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு அலுவலர் சங்கங்கள் திருநெல்வேலியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று, கடந்த அக்டோபர் மாதம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி திரு. சரவணன் அவர்கள், திமுக-வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் முறைகேடாக டெண்டர் வைக்கச் சொல்லி தன்னை வற்புறுத்துவதாகவும், எனவே தனக்கு 60 நாட்கள் ஈட்டா விடுப்பு வழங்கக் கோரியும், மேலும் தன்னை உடனடியாக வேறு இடத்திற்கு பணிமாறுதல் செய்யக்கோரியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு 28.10.2021 அன்று கடிதம் எழுதியதை அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன. நானும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தேன்.

அதே போல், ஆளும் கட்சியினருடைய அழுத்தத்தின் காரணமாக தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், திரு. வெங்கடாஜலம், இந்திய வனப்பணி அதிகாரி (ஓய்வு) அவர்களது மர்ம மரணத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரியிருந்தேன்.

இதுபோல் தமிழ் நாடு முழுவதும், இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், தைரியமாக ஒருசிலர் அளித்த புகார்கள் மீதோ, அல்லது நடைபெற்ற சம்பவங்கள் மீதோ இந்த அரசு இதுவரை எந்தவிதமான விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதாக செய்திகள் வருகின்றன. இதனால் தமிழகத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒருவித அச்ச உணர்வுடன் பணிபுரிந்து வருவதாக அரசு அலுவலர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

  • ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர், திரு. சந்தோஷ்குமார் அவர்களது மர்ம மரணத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும்
  • தி.மு.க-வினரின் கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளின் பணியிட மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும்,
  • அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது அதிகாரிகள் எப்படி அச்ச உணர்வின்றி, நேர்மையாக மக்கள் பணியாற்றினார்களோ, அதுபோல் இப்போதும் அதிகாரிகள் சுதந்திரமாக மக்கள் பணியாற்றவும், சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்தவும், அதிகாரிகளை மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கைக் எடுக்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்