எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்க – ஐகோர்ட்டில் “கோ வாரண்டோ” வழக்கு தாக்கல்!

Edapadi palanisamy

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்து, அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை மறைத்ததற்காக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால், எம்எல்ஏவாக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராகவும், எம்எல்ஏவாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிட வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பதவி நீக்கம் செய்து, அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், அந்த மனுவில், சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கை என்றும் கூறியுள்ளார். இதுவரை எம்எல்ஏவாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. அதனால் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, எடப்பாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்யகோரிய “கோ வாரண்டோ” வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்