ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – அரசியல் கட்சியினர் கருத்து

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு தெரிவித்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து : 

இது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்” என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து : 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலை திறக்க கூடாது என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.’ என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து : 

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.மக்களின் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு நான் தலை வணங்குகிறேன். முதலமைச்சர் திரு பழனிசாமி இன்றே தமிழக அமைச்சரவையைக் கூட்டி – தீர்ப்பை வரவேற்று அமைச்சரவை தீர்மானமாகவே வெளியிட வேண்டும் – அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் கருத்து : 

மக்கள் நீதி மய்யம்  தலைவர்  கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று என பதிவிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கருத்து : 

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.

சட்டத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றத்தில்  முதலமைச்சர் மேற்கொள்ளவேண்டும்.ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி கருத்து :

இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து :

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி, உச்சநீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி இந்த விவகாரத்தில் இறுதி வெற்றியை தமிழக அரசு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து : 

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் அதில், மக்களின் அறப்போராட்டத்திற்கும், அரசப் பயங்கரவாதத்தில் உயிரிழந்த 13 பேரின் ஈகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள்திரள் அறவழிப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கும் விரைவில் நீதி கிடைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கருத்து : 


இது குறித்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக் கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும். ஸ்டெர்லைட் ஆலையையை மீண்டும் திறப்பதற்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து : 

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில் , ‘ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் என்கிற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு, மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து :

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஸ்டெர்லைட் : உயர்நீதிமன்றத் தீர்ப்பு, பலியான 13பேருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவருக்கும் அளிக்கப்பட்ட நீதி. சிந்திய இரத்தம் வீண் போகாது என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office