எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

mk stalin

MK Stalin: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் தேர்தலுக்கு 4 நாட்கள் உள்ள நிலையில், நேற்று பாஜக தேர்தலை அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், பாஜக தேர்தல் வெளியான நிலையில் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் வலைதள பக்க பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பாஜக அரசு.

இது அப்பட்டமான பொய்க்கணக்கு. இதில் 2 கூறுகள் உள்ளன. அதில் ஒன்று மத்திய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. இரண்டாவது மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆகும்.

இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ள முதல்வர், இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.

இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது.

தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு. எனவே எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்