தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு மீதான தீர்ப்பு வரும் மே மாதம் 13ஆம் தேதி வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

Pollachi Sexual Assault case

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. சமூக வலைதளம் வாயிலாக பெண்களை ஏமாற்றி அவர்களை ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்த கொடூரம் அரங்கேறியதாக செய்திகள் வெளியாகின.

இந்த வழக்கின் தீவிரம் தமிழகம் முழுக்க தீயாய் பரவியது. இவ்வழக்கில் 8 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் 2019-ல்  கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு இவ்வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ வசம் சென்றது.

பின்னர் 2021-ல் ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேர் இந்த வழக்கில் கைதாகி தற்போது வரை சிறையில் உள்ளனர். இந்த பாலியல் வழக்கு மீதான விசாரணை கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி முன் நடைபெற்று வருகிறது.

இருதரப்பு வாதங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் என அனைத்தும் இன்று நிறைவுற்றதை அடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கின் மீதான தீர்ப்பு வரும் மே மாதம் 13ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி நந்தினி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்