“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

மு.க.ஸ்டாலின் எனக்கு எதிராக இனவெறி கருத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்வதாகவும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி ட்வீட் வெளியிட்டது வருந்தத்தக்கது என ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

rn ravi angry mk stalin

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா பெரும் சர்ச்சையில் முடிந்துள்ளது. சர்ச்சைகள் ஏற்பட முக்கிய காரணமே, நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரியை விட்டு பாடியது தான்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” ஆளுநரா? ஆரியநரா? என்ற கேள்வி எழுப்பி…திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்” எனவும் கடும் காட்டத்துடன்” கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அளிக்கப்பட்ட விளக்கம்

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் ” இன்று அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தை விடுபட்டது பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தினோம். அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர, ஆளுநருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறப்பட்டது.

அதைப்போல, இந்த விவகாரத்தில் இது முற்றிலும் கவனக்குறைவால் நடந்த நிகழ்வு. தவற்றுக்கு மன்னிப்பு கோருகிறோம் எனத் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை -டிடி தமிழ் அறிக்கை வெளியீட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ஸ்டாலின் தன் மீது வைத்துள்ளது பொய்க் குற்றச்சாட்டு என ஆளுநர் கூறியுள்ளார்.

ஆளுநர் குற்றச்சாட்டு

அவர் இந்த விவகாரம் குறித்து கூறியுள்ள விஷயங்களை ஆளுநர் மாளிகை தரப்பு தங்களுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ” முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். பிரதமர்மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.

ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்