மகாத்மா காந்தி., ராணி மங்கம்மா..! மதுரை பெருமைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்.! 

Tamilnadu CM MK Stalin speech about MaaMadurai Festival 2024

மதுரை : இன்று (ஆகஸ்ட் 8) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) வரையில் மதுரையின் சிறப்புகளை போற்றும் வகையில்  ‘மாமதுரை’ விழா நடைபெற உள்ளது. மதுரையில் பெருமைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யங் இந்தியன்ஸ் எனும் அமைப்பு இந்த விழாவை நடத்தி வருகிறது.

மாமதுரை விழா தொடக்கம் :

மதுரை தமுக்கம் மைதானத்தின் இன்று மாமதுரை விழா தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்வில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி என பலர் கலந்து கொண்டனர். மாமதுரை நிகழ்வை சென்னை முதலமைச்சர் முகாமில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மதுரை சிறப்புகள் :

காணொளி வாயிலாக தொடங்கி வைத்து மாமதுரை நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தவறு செய்தவன் மன்னனே ஆனாலும், அவனை கண்ணகி கேள்வி கேட்ட ஊர் மதுரை,  திருமலை நாயக்கர்,  ராணி மங்கம்மாள் ஆட்சி செய்த பூமி, புகழ்பெற்ற  மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம் அமைந்த ஊர், அனைத்து கலைகளும் ஒருங்கிணைந்த பண்பாட்டு சின்னமாக விளங்கும் ஊர், மாபெரும் பண்பாட்டு விழாவான சித்திரை விழா நடைபெறும் ஊர்.

சென்னைக்கு அடுத்து…

1866ஆம் ஆண்டே நகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஊர். 1971ஆம் ஆண்டு சென்னையை அடுத்து 2வது மாநகராட்சியாக கலைஞர் அறிவித்தார். மகாத்மா காந்தி அரையாடைக்கு மாறிய  ஊர், எனக்கு திருப்பம் தந்த திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை தான் என மதுரையை பற்றிய பல்வேறு சிறப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த மதுரையை எல்லோரும் போற்றலாம். 2013ஆம் ஆண்டு முதல்  மாமதுரை விழா நடைபெறுகிறது. மதுரை எம்.பி  சு.வெங்கடேசன் இந்த விழாவை தொடங்கி வைத்தார். அப்போது முதல் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புத்துயிர் பெரும் மதுரை :

இந்த விழாவின்போது நடைபெறும் நாளில் மதுரை புத்துயிர் பெறுகிறது. தமுக்கம் மைதானத்தில் பழங்கால மதுரை வடிவைப்பு எப்போதும் வடிவமைக்கப்பட்டு இருக்கும். மாமதுரை விழாவில் கருத்தரங்கம், [பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.  திரளான பொதுமக்கள் சிலப்பதிகாரத்தில் நடைபெறும் விழா போல இந்த விழாவில் கலந்து கொள்வர். இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தி வரும் யங் இந்தியன்ஸ் குழுவை நான் பாராட்டுகிறேன். மொழி, சாதி, மத வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு மனிதநேயம் போற்றுவோம் , மக்கள் ஒற்றுமையை போற்றுவோம். இந்த விழா போல மாநிலம் முழுவதும் விழா நடைபெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கூடுதல் தகவல்கள் :

மதுரை தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூா் தெப்பக்குளம், வைகைக் கரை உள்ளிட்ட இடங்களில் மாமதுரை விழா நடைபெற உள்ளது. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்,  பட்டம் விடும் திருவிழா, பலூன் திருவிழா, அடுக்குமாடி பேருந்து பயணம், பாரம்பரிய நடைபயணம், உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மாமதுரை விழாவில் நடைபெற உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்