சென்னையில் வேகமாக வடிந்து வரும் மழைநீர்.! 75000 மீட்பு பணியாளர்கள்.! தலைமை செயலர் தகவல்.!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழையை கொடுத்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அதனை வெளியேற்றும் வேலைகளிலும் , அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயவாடாவில் இருந்து 5 குழுக்கள் தமிழகம் வருகை.. மீட்பு, நிவாரணத்துக்கான உதவி எண்கள் அறிவிப்பு!
மழைநீர் வெளியேற்றம் குறித்தும் , மீட்பு பணிகள் குறித்தும் தலைமை செயலர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களிடம் இன்று பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், சென்னை அடையாறுக்கு தற்போது 37000 கனஅடிநீர் வந்துகொண்டு இருக்கிறது. நேற்று 40 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரும் அளவை விட மழைநீர் அளவு அதிகம். அடையாற்றின் வழியாக மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது.
கூவம் வழியாகவும் மழைநீர் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக முதலவர் கூவம் முகத்துவாரம் வழியாக மழைநீர் வெளியேறுவதை பார்வையிட்டார். முட்டுக்காடு, பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இயற்கையாகவும் வெளியேறி வருகிறது . செயற்கையாக மோட்டார் வைத்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.
பிற மாவட்டத்தில் இருந்த்தும் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 75000 ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய , மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள வடசென்னை பகுதிகளில் இன்று 4 முறை உணவு வழங்கியுள்ளோம். நேற்று 2 முறை உணவு வழங்கியுள்ளோம் என்றும் தலைமை செயலர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.