தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு குட்டி மோடியாக மாற ஆசைப்படுகிறார் – அண்ணாமலை
திமுகவைப் பொறுத்தவரையில் குடும்பமே கட்சி, கட்சியை குடும்பம் என்ற நிலைதான் உள்ளது. திமுகவில் எது கட்சி, எது குடும்பம் என்று தெரியவில்லை என்று அண்ணாமலை விமர்சனம்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கோடிக்கணக்கான ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மத்திய அரசின் திட்டங்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் அவர்கள் எந்த நேரமும் மக்களின் நலன் குறித்தே சிந்தித்து வருகிறார். திமுக தமிழகத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காக வேறு எதையும் அக்கட்சி செய்யவில்லை.
தற்போது பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என விமர்சித்துள்ளார். மேலும் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டது என்று ஒரு பழமொழி உண்டு. அதே போல பிரதமர் மோடியை பார்த்து தானும் குட்டி மோடி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மு.க.ஸ்டாலின். குட்டி மோடியாக மாறவேண்டுமென்றால் அடித்தட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும்.
அதற்கு குடும்பத்தை மறந்து உழைக்க வேண்டும். ஆனால் திமுகவைப் பொறுத்தவரையில் குடும்பமே கட்சி, கட்சியை குடும்பம் என்ற நிலைதான் உள்ளது. திமுகவில் எது கட்சி, எது குடும்பம் என்று தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.