#BREAKING: மாணிக்க விநாயகம் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்..!

Default Image

நடிகர் மாணிக்க விநாயகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம்(73) சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 6.45 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பருத்திவீரன், வெயில், சந்திரமுகி, உள்ளிட்ட படங்களின் பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், மாணிக்க விநாயகம் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பிரபல திரைப்படப் பாடகரும் நடிகருமான திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணர்வுகளைத் துல்லியமாக இரசிகர்களுக்குக் கடத்தி விருந்தளித்தவர் அவர்.

அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்