செய்தி ஊடக ஆசிரியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள், அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
செய்தி ஊடக ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம் எனவே கொரோனாஉள்ளிட்ட செய்திகளை எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. ஆனால், ரூ.6 விலை உயர்த்தி ரூ.3 குறைக்கப்படுவதாக செய்தி பரவுகிறது. அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது.
ஆனால் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது. பிற மாவட்டங்களுக்கு பயணிக்க இ-பதிவு மட்டும் போதும் என்று அரசு அறிவித்தது. அனுமதிக்கு காத்திராமல் பதிவு செய்துவிட்டு பயணிக்கலாம். ஆனால், இபாஸ் கட்டாயம் என்று மக்கள் மத்தியில் செய்தி போகிறது. இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லுங்கள், அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் என தெரிவித்தார்.