இந்தியா கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மும்பை பயணம்!

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை மும்பை புறப்பட்டுச் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றபின், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.
முதல்வர் ஸ்டாலினுடன் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் மும்பை செல்கிறார். மேலும், நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்றபின் மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார்.
2 நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே பாட்னா மற்றும் பெங்களூருவில் 2 பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், 3ஆவது கூட்டம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
மும்பையில் இன்று தொடங்க உள்ள 3வது கூட்டத்தில் புதிதாக 2 கட்சிகள் இணைந்துள்ளன. மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து திமுக உள்பட சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால், பாஜக அரசை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில், இன்று தொடங்க உள்ள 3வது ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.