“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்த அதிமுகவினரை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை செயலற்றதாகிவிட்டதாகவும் அவர் சாடினார்.
குடும்பத் தகராறு, முன்விரோதம் காரணமாகவே கொலைகள் நடந்ததாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுகவினர் வெளிநடப்பு செய்யும் பொழுது, “குற்றங்கள் நடக்கவில்லை என கூறவில்லை, நடந்துள்ளது, நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களை போன்று டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என நான் கூறவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி, சாத்தான்குளம் பிரச்சனையை நீங்கள் மறந்துவிட கூடாது.
உங்களைப் போல் இல்லை.தைரியமிருந்தால் நான் பேசுவதைக் கேட்டு விட்டுப் போங்கள். தைரியமில்லாமல் வெளியேறாதீர்கள்… தைரியம் இல்லாம ஓடுறீங்களே,.. ஓடாதீர்கள் எனக் கூறிய முதலமைச்சர், தைரியமிருந்தால் நான் பேசுவதை கேட்டுவிட்டு வெளியேறுங்கள் என அதிமுகவினருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், முதலமைச்சர் பேச்சை கேட்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக ஆட்சியிலே அதிக கொலைகள்:
2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்த போதும் அதிக கொலை நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்ட்ட சத்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.