பதற வைத்த செயின் பறிப்பு சம்பவம்.! என்கவுண்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!
நேற்று சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் இன்று காலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லபட்டார்.

சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. 2 கொள்ளையர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுப்பட்டு இருந்தது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெளிவானது.
சென்னை திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வேளைக்கு சென்ற பெண்கள், நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்கள், வெளியில் நடமாடிய பெண்கள் பலரிடம் நிகழ்ந்த இந்த செயின் பறிப்பால் சென்னை முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட சென்னை போலீசார் சிசிடிவி காட்சிகள், வாகன பதிவெண் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விமானம் மூலம் தப்பி செல்ல முயன்ற இருவரை விமான நிலையத்திலேயே கைது செய்தனர். இன்னொரு நபரை ஆந்திரா மாநிலம் நெல்லூரில் வைத்து தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட முக்கிய நபரான ஜாபர் குலாம் ஹூசைன் வடமாநிலத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரை இன்று அதிகாலை திருடப்பட்ட நகைகளை மீட்க தரமணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு ஹுசைன் தப்பி செல்ல முயற்சிக்கையில் இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தற்காப்புக்காக சுட்டதில் ஹுசைன் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.