காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான முக.ஸ்டாலின் தமிழக மக்களின் நீராதாரத்தை காத்திட, உடனடியாக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு காவிரி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதால், தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பொருட்டு, சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை எனும் கண் துடைப்பு நாடகத்தை மத்திய அரசு நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 3 வாரங்கள் கடந்த நிலையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராதது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத் தேர்தலுக்காகக் கண்துடைப்பு நாடகம் நடத்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உடனடியாக சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.