சில ரேஷன் கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ (Unified Payments Interface) வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பின்னர் மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலை கடைகளிலும் படிப்படியாக google pay, paytm போன்ற UPI மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வசதி மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
காலிடம் இருப்பின், 10 முதல் 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உணவு பொருள் கிடங்குகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை எவர்சில்வர் கொள்கலனில் வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதில் இரும்பு ஷெல்புகளில் அடுக்கிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அத்தியாவசிய பொருட்களை பெற மக்கள் 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே இலக்கு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.