#BREAKING: மன்னிப்பு கோரிய ஓபிஎஸ் – மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு!
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மன்னிப்பு கோரிய ஓபிஎஸ் தரப்பு, மனுவாக தாக்கல் செய்ய மறுப்பு.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மன்னிப்பு கூறியதாக கூறப்பட்டது. அப்போது, தங்கள் முன்பே வாதிட விரும்புகிறோம், நடந்தது நடந்ததாக இருக்கட்டும், திறந்த மனதோடு வழக்கை நடத்துங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நீதிபதியிடம் மன்னிப்பு கோரியதை மனுவாக தாக்கல் செய்ய முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தனி நீதிபதி தெரிவித்திருந்த கருத்துக்களை சுட்டிக்காட்டிய கோரிக்கை வைத்தோம் என்றும் கூறியுள்ளனர். இதன்பின், 2 நாட்களுக்கு முன்பு என்னிடம் முறையிட்டு இருந்தால் நானே விலகி இருப்பேன் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இருந்து வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு இரண்டு முறை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருந்தனர். இந்த நிலையில், மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய முடியாது என ஓபிஎஸ் தரப்பு பதில் அளித்ததை தொடர்ந்து, நீதிபதியை மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்று, மனு தாக்கல் செய்த பிறகு அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.