#BREAKING: தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Health Minister Ma Subramanian has announced that 33 more people in Tamil Nadu have been confirmed to be infected with Omicron.

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை டிஎம்சி வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கு ஒமிக்ரான் முடிவு வரவேண்டி உள்ளது என்றும் ஒமிக்ரான் உறுதியான 34 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர் என தெரிவித்தார்.

சோதனைக்கு அனுப்பப்பட்டவரக்ளில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன. அதில் 33 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியான 114 பேரில் 57 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்ததால் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என அமைச்சர் குறிப்பிட்டார். லேசான தலைசுற்றல் போன்ற சிறுசிறு பாதிப்புகளுடன் 34 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதுவரை தமிழகத்தில் சென்னையில் 26, மதுரையில் 4, திருவண்ணாமலையில் 2, சேலத்தில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. விமான நிலையங்களை கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது எனவும் கூறினார்.