அரசு அலுவலகத்தில் மோடி படத்தை மாட்டிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி கைது!

BJP Informal Workers Union district secretary arrested for trespassing on government office

அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படத்தை மாட்டிய பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கைது.

கோவை அருகே பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் புகுந்த பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர், உள்ளே புகுந்து சுவற்றில் பிரதமர் மோடியின் படத்தையும் மாட்டியுள்ளனர்.  இதனைப் பார்த்த பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் மாற்றுவது தவறு என்றும் வேண்டுமானால் அனுமதி பெற்றுக்கொண்டு வந்து படத்தை மாட்டிக்கொள்ளுங்கள், மாஸ்க் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அதை பாஜகவினர் கேட்கவில்லை என்றும் இதனால், பாஜகவினருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி சுவரில் மாட்டப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தின் பக்கத்திலேயே பிரதமர் மோடியின் போட்டோவை மாட்டினர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில், முதல்வர் ஸ்டாலின் படம் இருக்கு.. கருணாநிதி படம் இருக்கு.. அப்படின்னா பிரதமர் மோடியின் படமும் வைக்க வேண்டும். பிரதமர் மோடியின் போட்டோவை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.

இதனைத்தொடர்ந்து, அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதனிடைய, தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு 1978ம் ஆண்டு அரசாணை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.