பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!
அனுமதியின்றி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மிகுந்த சிரமத்தை கொடுத்து வருகின்றனர் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய அரசு இந்தி மொழியையே திணிக்க பார்க்கிறது என தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் 90 நாட்கள் நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்திய நிலையில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி போலீசார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து பொதுமக்களுக்கு இடையூறாக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள் என அதனை தடுத்தனர். தடையை மீறி கையெழுத்து இயக்கம் நடத்துவோம் என தமிழிசை கூறியதால் அவரை தடுப்பு காவலின் கீழ் கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து, அனுமதி இல்லாமல் இந்த இயக்கத்தை நடத்தியதாக தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களையும் தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் வளைத்தள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது “இன்று (06.03.2025) சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் காவல்துறை அனுமதியின்றி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மிகுந்த சிரமத்தை கொடுத்து வருகின்றனர்.
ஜனநாயக நாட்டில் அரசு அனுமதியுடன் இயக்கம், கூட்டங்கள், பேரணிகள் நடத்த முடியும். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்த திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் சட்டத்தை மதிக்காமல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்யலாமா?
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் இதுபோன்ற தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர். நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பை பொறுத்துக் கொள்ளமுடியாமல், திசைதிருப்பும் ஒரு நிகழ்ச்சியாக இதுபோன்ற செயல்களில் பா.ஜ.க. வினர் ஈடுபடுகின்றனர். இவர்களின் செயலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என காட்டத்துடன் கூறியுள்ளார்.
இன்று (06.03.2025) சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் காவல்துறை அனுமதியின்றி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்தி, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மிகுந்த சிரமத்தை கொடுத்து வருகின்றனர்.…
— Selvaperunthagai K (@SPK_TNCC) March 6, 2025