சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ராஜேந்திரன் என்பவர், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்று தனது கனரா வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ராஜேந்திரனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், பணம் எடுத்துக் கொடுக்க உதவி செய்வதாக கூறியுள்ளார். பணம் எடுத்த பின்னர் தான் வைத்திருந்த போலி ஏடிஎம் கார்டு ராஜேந்திரனிடம் மாற்றிக் கொடுத்துவிட்டு அந்த நபர் தப்பி சென்று விட்டார்.
இது தெரியாமல் இருந்த முதியவர் ராஜேந்திரன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வங்கி கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தி வந்துள்ளது, இதை பார்த்து ராஜேந்திரன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து 4 நாட்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1.13 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது. பின்னர் உடனே அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் ராஜேந்திரன் பணம் எடுத்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த திருடனை தேடி வருகின்றனர்.