ரெய்டை திசை திருப்ப இப்படி பண்றோமா? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!
தமிழர்களை நாகரீகமற்றவர்கள் என்று சொல்பவர்கள் தான் நாகரீகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கோபத்துடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்பிக்களை பார்த்து ‘அநாகரீகமானவர்கள்’ என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை ஓயாத நிலையில் இருக்கும் சுழலில், திமுக எம்பிகளுக்கும், மத்திய பாஜக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நிலவி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில் இன்னும் சர்ச்சையாக வெடிக்கும் அளவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் புகைப்படத்தை அனைத்து துறை அலுவலகத்திலும் வைத்து மாலை போட்டு மரியாதை செய்கிறீர்களே என பெரியாரை மறைமுகமாக விமர்சனம் செய்தது பேசுபொருளாக மாறியுள்ளது.
இவர்களுடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. ஒரு பக்கம் பாஜகவை சேர்ந்தவர்கள் திமுகவை விமர்சனம் செய்தும் மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்தவர்கள் அதற்கு பதில் அளித்தும் வருகிறார்கள். இந்த சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெரியார் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியது முதல்…அண்ணாமலை பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசியிருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் செய்தியாளர் ஒருவர் ” இப்போது ரெய்டு அதிகமாக நடந்து வருகிறது இதனை திசை திருப்பதான் திமுக நிதி அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ” இது இப்போது நடக்கவில்லை 3 மாதங்களாகவே இப்படியான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கல்வி நிதி வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். நேற்று தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது அதிலும் அவர் பேசியிருந்தார். என்னை பொறுத்தவரை பாஜக தான் இதனை திசை திருப்புகிறார்கள். அமலாக துறையை அவர்கள் தான் அனுப்பி வைத்தார்கள்” எனவும் துணை முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
அதனைத்தொடர்ந்து பெரியார் குறித்து மறைமுகமாக பேசிய நிர்மலா சீதாராமன் பேச்சு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கும் பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ” தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டையும், பெரியாரையும் இழிவுபடுத்துவதை அவர்கள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார். இழிவுபடுத்துவது கொள்கை முடிவாக வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். நாங்கள் என்ன நாகரிகம் அற்றவர்களா? என்னைப்பொறுத்தவரை தமிழர்களை நாகரீகமற்றவர்கள் என்று சொல்பவர்கள் தான் நாகரீகமற்றவர்கள்” எனவும் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துவிட்டு சென்றார்.