மாணவர்கள் அரியர் போடுவதற்கு காரணம் என்ன ?எந்த கல்லூரி என்ன நிலையில் உள்ளது ?இதோ விவரம் ….

Default Image

அண்ணா பல்கலைகழக நிர்வாகம் தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள், 11 ஆம் வகுப்பு பாடத்தை கூட சரியாக படிக்காமல் கல்லூரிக்கு வந்துவிட்டதால் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக,  வினோத விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நிகர் நிலை பல்கலைகழகங்கள் தவிர்த்து இயங்க கூடிய அனைத்து பொறியியல் கல்லூரிகளும் சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. மொத்தம் உள்ள 565 பொறியியல் கல்லூரிகளில் 466 கல்லூரிகளில் தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையே நடைபெற்றது.

முதல் செமஸ்டர் தேர்வில் பங்கேற்ற 466 கல்லூரிகளில் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 36 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 44 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 300க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இரண்டு இலக்க மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். 59 கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்களும், 12 கல்லூரிகளில் மட்டுமே 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவென்றால், கோவையை சேர்ந்த பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதிய 290 மாணவர்களில் 278 பேர் தேர்வாகி 95 சதவீதத்துடன் முதல் இடத்தையும், சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதிய 726 மாணவர்களில் 644 மாணவர்கள் தேர்வாகி இரண்டாவது இடத்தையும், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதிய 443 பேரில் 393 பேர் தேர்வாகி 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

20 வது இடத்தை பிடித்த பனிமலர் கல்லூரியில் அதிக பட்சமாக 1684 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 1194 பேர் மட்டுமே தேர்வாயினர். 71 சதவீதமாக அங்கு தேர்ச்சி விகிதம் குறைந்தது. 129 வது இடத்தில் உள்ள கோவை கலைஞர் கருணாநிதி கல்லூரியில் தேர்வு எழுதிய 556 மாணவர்களில் 178 மாணவர்கள் மட்டுமே தேர்வாயினர். இங்கு 32 சதவீதமாக தேர்ச்சி விகிதம் குறைந்தது. 323 வது இடத்தில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதிய 194 பேரில் 20 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

மொத்தம் உள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் திருநெல்வேலி அரசு பொறியல் கல்லூரியில் தேர்வு எழுதிய 369 பேரில் 285 பேர் தேர்வாகி 77 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் 240 பேர் எழுதி 155 பேர் தேர்வாகி உள்ளது குறிப்பிடதக்கது. கணித பாடத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறாததால் அண்ணாபல்கலை கழகத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம், 34 சதவீதமாக குறைந்து அதளபாதாளத்துக்கு சென்றுள்ளது .

அண்ணாபல்கலை கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத பொறுப்பற்ற பொறியியல் கல்லூரிகளுமே இந்த தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணம் என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

அதே நேரத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு அண்ணாபல்கலை கழகம் சார்பில் செவ்வாய்கிழமை விளக்கம் அளிகப்பட்டுள்ளது. அதில் புதிதாக பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் 11 ஆம் வகுப்பு பாடங்களை படிக்காமல் தேர்வாகி பொறியியல் படிப்பிற்கு வந்துள்ளதால் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகவும், நீட் தேர்வுக்கு தயாராகி குழப்பமடைந்து பின்னர் பொறியியல் படப்பில் சேர்ந்ததால் அவர்களால் முழு ஈடுபாட்டோடு படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்று சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

பள்ளியில் மனப்பாடம் செய்து படித்து பழகியவர்கள் பொறியியல் கல்லூரி தேர்வில் சுயசிந்தனை கேள்விகளுக்கு பதில் அளிக்க கூடிய நிலை ஏற்படும் போது அதனை எதிர் கொள்ள இயலாமல் தோல்வி அடைவதாக அண்ணாபல்கலை கழகம் விளக்கம் அளித்துள்ளது.

கல்வியின் தரம் மட்டுமே அந்த நாட்டின் தரத்தை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் என்பதை மாணவர்களும் பல்கலைகழக நிர்வாகமும் உணரவேண்டிய தருணம் இது..!

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்