இந்திய பெண்களுக்கு 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை – கமல்ஹாசன் ட்வீட்

இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் ஓரிக்கை வேளிங்கப்பட்டரை ஆசிரியர் தெருவை சேர்ந்த 24 வயதுடைய மாற்றுத்திறனாளியான சரண்யா, அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த மையத்தில் கழிவறை வசதி இல்லாததால், அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றா சரண்யா, கழிவு நீர் தொட்டியின் மீது கால் வைத்த போது ஓடு உடைந்து தொட்டியில் தவறி விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். பின்னர் சரண்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். மாற்றுத்திறனாளியான சரண்யா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை. அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை. அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம். பொது இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதி செய்திருக்கிறோமா? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் பதில் தேடியாக வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 8, 2020