பேனர் ஊழல்.. ஆதாரம் இருக்கிறது.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு.!
ஒரு விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரி 603 உட்பட மொத்தமாக 7,906 ரூபாய் செலவு கணக்கிடப்பட்டுள்ளது. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
கிராமப்புறங்களில் நம்ம ஊரு சூப்பரு எனும் திட்ட விளம்பர பலைகையில் ஊழல் நடைபெற்று இருந்ததாகவும், ஒரு விளம்பர பலகைகாக மட்டுமே 7,906 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல். பேனர் அச்சிட ஒன்றுக்கு 611 ரூபாய் தான் செலவாகும். அச்சடிக்கும் செலவு , சரக்கு மாற்றும் சேவை வரி உட்பட இதுதான் செலவு. ரூபாய் 7,906 என்பது முற்றிலும் தவறான தகவல்.’ என விளக்கம் அளித்து இருந்தார்.
அமைச்சரின் இந்த மறுப்புக்கு மறுப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,’ ” நம்ம ஊரு சூப்பர்” இயக்க விளம்பர பேனர் ஒன்றுக்கு 7,906 ரூபாய் செலவில் அச்சடிக்க வேண்டும் என வட்டார அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை இருக்கிறது. ‘ எனவும் ,
தஞ்சாவூரில் ஒரு விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரி 603 உட்பட மொத்தமாக 7,906 ரூபாய் செலவு கணக்கிடப்பட்டுள்ளது என்ற ஆதாரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.