சென்னை :தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சர்ச்சை எழுந்தவுடன் கஸ்தூரி விளக்கம் அளித்தார், பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
ஆனாலும் கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகார் அடிப்படையில், அவர் மீது கலவரத்தை தூண்டும் நோக்கில் பேசுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால், கஸ்தூரி இன்றிரவுக்குள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப்பதிவு விபரம் குறித்த தகவல் வெளியகியுள்ளது.
அதன்படி, கலவரத்தை தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பகைமை உண்டாக்கும் பேச்சு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
