வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியின் முன்ஜாமீன்.! தமிழகம் செல்ல டெல்லி நீதிமன்றம் உத்தரவு.!
வடமாநிலத்தவர் பற்றிய வதந்திகள் பரப்பிய பாஜக நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை முடித்து வைத்ததுடெல்லி நீதிமன்றம்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகளை சிலர் பரப்பியதால் தமிழகத்தில் ஓர் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்த சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொய்யான வதந்திகள் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
தூத்துக்குடியில் வழக்குப்பதிவு : ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, வடமாநில தொழிலாளர்கள் இங்கே தாக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ரா மீது தூத்துக்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
முன் ஜாமீன் : இந்நிலையில் இந்த கைது நடவடிக்கையில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ரா மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
டெல்லி நீதிமன்ற உத்தரவு : அதில், வதந்தி பரப்பியது தொடர்பாக இதுவரையில் பிரசாந்த் உம்ரா மன்னிப்பு கூட கேட்கவில்லை என தமிழக அரசு வாதிட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, இந்த முன்ஜாமீன் மனுவை தமிழகத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு பாஜக நிர்வாகியின் முன் ஜாமீன் மனு வழக்கை முடித்து வைத்தது.