இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் ஊர் திரும்பினர் – தமிழக அரசு

TNGovt

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினரை அந்தந்த நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது. அந்தவகையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் இருக்கும் இந்தியர்களை ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. இஸ்ரேலில் சுமாா் 18 ஆயிரம் இந்தியா்கள் வசித்து வருவதாக கூறப்பட்டது. அவர்களில் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களை அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் கடந்த அக்டோபர் 12ம் தேதி தொடங்கப்பட்டது.

அதாவது, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வருகிறது. முன்னதாக, ஏர் இந்தியா விமானம் மூலம் இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து 212 இந்தியா்கள் அக்.13ம் தேதி இந்தியா வந்தடைந்தனர். நேற்று இரவு  18 நேபாள குடிமக்கள் உள்பட 286 பேருடன் 5வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது.

இதுபோன்று, கடந்த வாரம், டெல் அவிவில் இருந்து வந்த நான்கு சிறப்பு விமானங்களில் குழந்தைகள் உட்பட மொத்தம் 918 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர். இதில் தமிழர்கள் அடங்குவர். இந்த நிலையில், இஸ்ரேலில் இருந்து இதுவரை 147 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களுடன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் கண்டறியபட்டது.

அதன் அடிப்படையில் , இதுவரை நான்கு கட்டங்களாக டெல்லி வந்த 98 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழ்நாடு அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் முலம் டெல்லி வந்தடைந்த 23 தமிழர்கள் தமிழ்நாடு அரசினால் வரவேற்கப்பட்டு, விமான பயணச்சீட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோயம்பத்தூர் விமான நிலையம் வந்த 4 நபர்கள், சென்னை விமான நிலையம் வந்த 17 பேர், அதே போன்று மதுரை விமான நிலையம் வந்த 2 நபர்கள் மாவட்ட நிர்வாகத்தால் வரவேற்கப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைத்தனர். எனவே, இஸ்ரேலில் இருந்து இதுவரை 121 பேர் தமிழக அரசின் செலவிலும், 26 பேர் தங்களது சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்தனர் என கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்