மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது!உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்
உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் , உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மருத்துவச் சான்றிதழை வேட்புமனுவுடன் தாக்கல் செய்வதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி இதுதொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து பதில் மனுவாக தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என கேட்டார்.
அப்போது பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் , அலுவலக உதவியாளர் முதல் நீதிபதிகள் வரை பணிக்கு சேரும் முன்னர் மருத்துவச் சான்று சமர்ப்பிப்பதுபோல் சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏன் மருத்துவ சான்றை கட்டாயமாக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அமெரிக்காவில் இருமுறைக்கு மேல் போட்டியிட முடியாது என்பது போல் இந்தியாவிலும் சட்டம் கொண்டுவர வேண்டும்என கூறினார்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதென்று குறிப்பிட்டார்.
தேர்தல்களில் வேட்பாளர் யாரென்று பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை என்றும், சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிப்பதாகவும் தெரிவித்தார். அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், 1967 முதல் திரைத்துறை தொடர்பானவர்கள் தான் ஆட்சியில் இருந்துள்ளதாகவும், மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது என்றும் கூறினார்.
கலைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த போது கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் அளித்த வரவேற்பை போன்று, தற்போதைய நடிகர்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறுகையில், குண்டர்களுக்கும், நில அபகபரிப்பாளர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்கும் அரசியல்கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
ஒரு லட்சம் வாக்காளர்களின் கையெழுத்திருந்தால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய முடியும் என தகுதி நிர்ணயிக்க வேண்டுமெனகூறிய கிருபாகரன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தத்தை ஆணையம் தொடர வேண்டும் எனவும் கூறி விசாரணையை ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.