கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின்பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம்சாட்டுகின்றன.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.
இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, கடந்த 3 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.
ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் தலையிட வேண்டும் எனக் கோரி மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் போராட்டத்துக்கு மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஜனநாயகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்ற முடியாது. உண்மையில் டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விஷயமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் விஷயமும் வெவ்வேறானது. டெல்லி அரசில் மத்திய அரசின் தலையீடு வேறு, தமிழகம், புதுச்சேரியில் மத்திய அரசு செய்யும் தலையீடு என்பது வேறு. இதுபோன்று மத்திய அரசின் தலையீடுகள் தொடர்ந்தால், நல்ல விஷயங்களுக்காக மாற்றத்தை எதிர்நோக்கும் மக்களை வெறுப்புள்ளாக்கும்.
இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.