பட்டப்பகலில் நாமக்கல் அருகே பள்ளி மாணவர்களைக் ஆம்னி வேனில் வந்த கும்பல் கடத்த முயன்றதாக புகார்!
பட்டப் பகலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளிச் சிறுவர்களை ஆம்னி வேனில் வந்த மர்மக்கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்னி வேன் ஒன்று அவர்கள் அருகே வந்து நின்றது. உள்ளே இருந்தவர்கள் மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சாக்லேட்டை மாணவர்கள் வாங்க மறுத்ததால் கத்தியைக் காட்டிய கும்பல், ஆம்னி வேனில் ஏறுமாறு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அச்சத்தில் மாணவர்கள் கூச்சலிடவே அந்தக் கும்பல் வேனில் தப்பிச் சென்றுள்ளது.
இதை அடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், சிறுவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர். மாணவர்களை கடத்த முயற்சி செய்தவர்களை கைது செய்ய கோரி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.