நெல்லையில் கைதான திருமண மோசடி தம்பதி பற்றி பரபரப்பு தகவல்கள்..!

Default Image

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மணமகள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதை அறிந்த ஒரு கும்பல் முருகனிடம் செல்போன் மூலம் பேசி அழகான பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, பெண்ணுக்கு பெற்றோர் இல்லை என்பதால் திருமண செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான பணத்தை அனுப்புங்கள் என்றும் கூறியுள்ளது.

இதனை நம்பிய முருகன், அந்த கும்பலுக்கு ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்து 705 கொடுத்துள்ளார். திருமணத்துக்கு தாமதம் ஆனதால் சந்தேகம் அடைந்த முருகன் இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

முருகன் புகார் தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் ரமா, அனிதா ஆரோக்கிய மேரி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே சத்யாநகரில் வசித்து வந்த சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேரும் இந்த திருமண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த கும்பல் சென்னை அடையாறு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன், சென்னை எல்.ஐ.சி. ஊழியர் அன்பழகன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான அரசகுமரன் உள்ளிட்டோரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பல கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர்.

தற்போது போலீசார் இவர்களிடம் இருந்து ரூ.63½ லட்சம், 69 பவுன் தங்க நகைகள், நிலம் மற்றும் சொகுசு பங்களா, செல்போன்கள், பித்தளை சிலை ஆகியவற்றை மீட்டுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1½ கோடி ஆகும்.

இந்த திருமண மோசடி தம்பதி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கைதான சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேருக்கும் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் என். புதுக்கோட்டையை அடுத்த காளிசெட்டிபட்டி ஆகும். இவர்கள் பல பேரிடம் இதுபோல் மோசடி செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு அஞ்சுகிராமம் அருகில் சொகுசு பங்களா கட்டி வசித்து வந்துள்ளனர். இதுபோன்ற மோசடி செயல்களுக்காகவே அவர்கள் நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த கும்பல் மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தப்படும் இணையதளங்களை அடிக்கடி நோட்டமிட்டுள்ளனர். அதில் 45 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கும் அதிகாரிகள், வசதி படைத்தவர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். பின்னர் அவர்களது செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் அழகாகவும், ஆபாசமாகவும் பேச்சு கொடுத்து ஆசையை தூண்டினர். பின்னர் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவற்றில் பதிவிடப்பட்டு இருக்கும் அழகான குடும்ப பெண்களின் படங்களை தேர்வு செய்து வைத்து, அதில் மிகவும் அழகாக இருக்கும் பெண்களின் புகைப்படங்களை வாட்ஸ்- அப் மூலம் அந்த ஆண்களுக்கு அனுப்பி உள்ளனர்.

அதாவது செல்பி மோகத்தில் இளம்பெண்கள் தங்களது செல்போன் படங்களை வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பதிவு செய்கின்றனர். அதனை சேமித்து வைத்து மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் அதிகமாக வெளியே தெரியாத துணை நடிகைகள், டி.வி. நாடக நடிகைகள் படங்களையும் அனுப்பி உள்ளனர். இதில் சிக்குகின்றவர்களை நைசாக பேசி தங்களது வங்கி கணக்குக்கு இணையதளம் மூலம் பணத்தை அனுப்ப கூறி பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

தற்போது நெல்லை மாட்ட குற்றப்பிரிவு போலீசார் சுப்பிரமணியன் வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளவர்களின் பட்டியலை சேகரித்து உள்ளனர். இதில் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தி விவரங்களை சேகரிக்க உள்ளனர்.

மேலும் இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டோர் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்