டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு  இடைக்காலத் தடை!

Default Image

சென்னை உயர் நீதிமன்றம்,டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ‘பார்க்லே’ வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், ரூ.44 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து பவுண்டுகளை ‘டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக டிடிவி தினகரன் மீது கடந்த 1996-ம் ஆண்டில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்தது.

இதேபோல, ஐரோப்பிய நாடுகளில் ‘ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட்’ என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட்மென்ட், டெண்டி இன்வெஸ்ட்மென்ட், பேனியன் ட்ரீ ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் பார்க்லே வங்கியில் ரூ.36.36 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், ரூ.1 லட்சம் மதிப்புள்ள பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாக டிடிவி தினகரன் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளும் கடந்த 22 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. பார்க்லே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் சார்பில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தன் மீதான மற்றொரு வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பார்க்லே வங்கியில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான முதல் வழக்கின் விசாரணை அடிப்படையில்தான் இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது. இரு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. முதல் வழக்கை விசாரிக்க ஏற்கெனவே இடைக்காலத் தடை உள்ளபோது, இரண்டாவது வழக்கை தனியாக விசாரிக்கக் கூடாது. ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஆர்எம்டி டீக்காராமன் முன்பு நடந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தினகரன் ஒவ்வொரு மனுவாக தாக்கல் செய்து வருகிறார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது’’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக அமலாக்கத் துறை வரும் ஜூன் 9-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதுவரை தினகரன் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் மற்றொரு வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்