காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் போராட்டங்களை கைவிட வேண்டும்…!தமிழிசை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் போராட்டங்களை கைவிட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள ‘ஸ்கீம்’ என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் மே 3-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் நிலைப்பாடு சரி என்பதையும், சட்ட ரீதியாகவே மத்திய அரசு செயல்படுகிறது என்பதை ஏற்கும் வகையில் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு கேட்டதுபோல சற்று அவகாசத்தையும் கொடுத்துள்ளனர்.
காவிரி பிரச்சினை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதற்கு காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளே காரணம். இதை மறைப்பதற்காகவே இப்போது மத்திய அரசை குறைகூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம், கர்நாடகா இரு மாநிலங்களிலும் அமைதி காக்க வேண்டும். அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காவிரி பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காணும் வகையில் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் நடத்தும் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும். அரசியல் சுய லாபங்களுக்காக போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு செய்யாமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற வேண்டும்,இவ்வாறு அறிக்கையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.