‘உலகளவிலுள்ள சதிகாரர்களால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது ! பாபா ராம்தேவ் சர்ச்சை பதிவு..!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மே மாதம் 22ம் தேதி இறுதியில் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராடக்காரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது.
போராட்டத்தின் போது உயிரிழப்புகளால் மக்களின் மனதில் காயம் ஆறாத நிலையில் இதுதொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிலையில் பிரபல சாமியார் பாபா ராம்தேவ், லண்டனில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலை சந்தித்து பேசினேன். லட்சக்கணக்காண வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் தேசத்தை கட்டமைப்பதில் அவருடைய பங்களிப்பிற்கு மரியாதை செய்கிறேன். தென் இந்தியாவில் உள்ள வேதாந்தா ஆலைக்கு எதிராக அப்பாவி மக்கள் மூலம் உலகளவிலுள்ள சதிகாரர்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தொழிற்சாலைகள்தான் தேசத்தினுடைய வளர்ச்சிக்கு கோயில்கள். அவைகளை மூடக்கூடாது,” என பதிவிட்டுள்ளார்.