இன்றைய முக்கிய செய்திகள்..!
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற பெஞ்சில், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தீர்ப்பளிக்க, நீதிபதி சுந்தர், சபாநாயகரின் முடிவு செல்லாது என தீர்ப்பளித்தார். நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை தெரிவித்ததால் வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரம்ஜான் இன்று என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை தமிழக தலைமை காஜி, பிறை தெரியாததால், சனிக்கிழமை தான் ரம்ஜான் என தெரிவித்தார். இதனால் இன்று விடுக்கப்பட இருந்த அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டு, நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில், ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஷூஜத் புகாரி மற்றும் அவரது வாகன ஓட்டுநர், தீவிரவாதிகளால் பத்திரிகையின் அலுவலகத்தின் வெளியே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராஷ்ட்ரிய ரைபிள் படையை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் அவுரங்கசீப், ரம்ஜானுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில், திருநங்கைகளுக்கான பிரத்யேக மருத்துவ கிளீனிக்குகள் நிறுவப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கின. முதல் போட்டியில், சவுதி அரேபியாவை 5-0 என வீழ்த்தியது ரஷ்யா. செரிஷேவ் இரண்டு கோல்கள் அடிக்க, கசின்ஸ்கி, ஜியூபா, கோலோவின் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது சர்ச்சைக்குரிய முறையில் வரி விதித்து வரும் நிலையில், பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது புதிய வரிகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.