அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறைக்கான நிதியை வழங்குமாறு பியூஷ் கோயலை நேரில் சந்தித்து வலியுறுத்தல்!
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,உள்ளாட்சித் துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்குமாறு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததைக் காரணம் காட்டி, கடந்த 2017 முதல் வழங்க வேண்டிய 3 ஆயிரத்து 550 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் படி உள்ளாட்சித் தொகுதிகளை மறுவரையறை செய்யக் கோரி வழக்குகள் தொடரப்பட்டதாலேயே தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனவே, மாநில நலன் கருதி, ஊரக வளர்ச்சிக்காக நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 550 கோடியே 21 லட்சம் ரூபாயை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், மத்திய பஞ்சாயத்துராஜ் இணையமைச்சர் பர்சோட்டம் ருபாலாவைச் (Parshottam Rupala) சந்தித்த அமைச்சர் வேலுமணி, துறைசார்ந்த நிலுவைத் தொகை ஆயிரத்து 829 கோடியே 78 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.