பணி நேரம் முடிந்துவிட்டது என்று கூறி சரக்கு ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார். இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 13 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று நேற்று காலை 3 மணிக்கு புறப்பட்டுள்ளது. கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள மாதுளம்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் சென்றதும் அந்த சரக்கு ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மாதுளம்பேட்டை ரயில்வே கேட் உடனடியாக மூடப்பட்டது.
இந்நிலையில் சரக்கு ரயிலை இயக்கி வந்த இன்ஜின் டிரைவர் தன் உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு தனக்கு பணி நேரம் முடிந்து விட்டதாகவும், அடுத்த ஷிப்டுகான டிரைவர் வரவில்லை என்றும், தனது பணிநேரத்தை விட இதுவரை கூடுதலாக வேலை பார்த்துவிட்டேன் என்றும் சரக்கு ரயில் இன்ஜினை இயக்க வேறு டிரைவரை அனுப்பும்படியும் கூறியுள்ளார்.
அப்போது உயர் அதிகாரிகள் அந்த டிரைவரிடம் தஞ்சை வரை ரயிலை ஓட்டி செல்லுங்கள் அங்கு மாற்று டிரைவர் வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்கள். ஆனால், அதிகாரிகளின் பதிலை ஏற்காத டிரைவர் சரக்கு ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு ரயிலில் இருந்து இறங்கி சென்றுவிட்டார்.
சரக்கு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் மாதுளம்பேட்டை ரயில்வேகேட் பகுதியில் சுமார் 13 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு மாற்று டிரைவர் வந்ததை தொடர்ந்து அந்த சரக்கு ரயில் மாதுளம்பேட்டை ரயில்வே கேட்டில் இருந்து புறப்பட்டு சென்றது.