விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன? போராட்டத்துக்கான காரணம் இதுதானா…

farmers protest

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டத்தை நடத்தினர். அப்போது மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.

பின்னர் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு தொடர் போராட்டம் முடிவு வந்தது. இந்த நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி மீண்டும் மற்றொரு போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.

அதன்படி, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லி சலோ பேரணியை தொடங்க உள்ளனர். இந்தக் கோரிக்கைகளில் முதன்மையானது, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்யும் சட்டம். நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு இது முக்கியமான உயிர்நாடியாகும்.

பேச்சுவார்த்தை தோல்வி.. திட்டமிட்டபடி விவசாயிகள் போராட்டம்.! உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி.!

மின்சாரச் சட்டம் 2020 ரத்து, லக்கிம்பூர் கெரியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல், அப்போது விவசாயிகள் இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுதல் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றசாட்டியுள்ளனர்.

மேலும், 2020-21 போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுதல், கடன் தள்ளுபடி, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துதல், முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

எனவே, ‘விவசாயிகளின் டெல்லி சலோ’ பேரணியை இன்று நடத்தவுள்ள நிலையில், சிங்கு, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியை நோக்கி வரும் போராட்ட வாகனங்கள் நகருக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தடுப்புக் கம்பிகளுடன், ஆணிகள் பொருத்துதல், கிரேன்கள் மற்றும் மண் அள்ளும் கருவிகளை மற்றும் கான்கிரீட் தடுப்புகளை பயன்படுத்தி சாலையைத் தடுப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை டெல்லி காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்