உஷார்..!அனைத்து மாநிலங்களும் ‘கருப்பு பூஞ்சையை’ ஒரு தொற்று நோயாக அறிவிக்க வேண்டும்- மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தல்…!

அனைத்து மாநிலங்களும் ‘கருப்பு பூஞ்சையை’ ஒரு தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,தற்போது கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்றானது பரவி வருகிறது.அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவில் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது,இதனால்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ‘மியூகோமிகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.
இந்த ‘மியூகோமிகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்றானது,கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் வைரஸிலிருந்து குணமடைந்த நீரிழிவு நோயாளிகளிடையே பரவி வருகிறது.குறிப்பாக தெலுங்கானா, ராஜஸ்தான்,டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவில் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து,தற்போது கேரளா மற்றும் தமிழகத்தில் குறிப்பாக சென்னை,மதுரை போன்ற பகுதிகளில் கருப்பு பூஞ்சை தொற்றானது பரவி வருகிறது.மேலும்,தூத்துக்குடியில் 57 வயதுடைய முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சை தொற்றினால் இன்று காலை உயிரிழந்துள்ளார். மேலும், டெல்லியிலும் 130 க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,இந்த தொற்று நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால்,தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் அனைத்து மாநிலங்களும், ‘மியூகோமைகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை நோயை ஒரு தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வலியுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக,கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,ராஜஸ்தான் அரசு நேற்று இந்த நோயை ஒரு தொற்று நோயாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து,தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் தெலுங்கானாவிலும் கருப்பு பூஞ்சை நோயானது ஒரு தொற்று நோயாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சையிலிருந்து குணமாகும் வழிமுறை:
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கருப்பு பூஞ்சை தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படாவிட்டால் உடலுக்கு மிகவும் ஆபத்தாகிவிடும்.
அதாவது,தினமும் பாரத் சீரம் நிறுவனத்தின்,லிபோசோமால் ஆம்போடெரிசின் பி அல்லது எல்எம்பி என்ற ரூ.3,500 மதிப்புள்ள மருந்தின் ஒரு டோஸினை போட்டுக்கொள்ள வேண்டும்.தொடர்ந்து எட்டு வாரங்கள் வரை இந்த பூஞ்சை எதிர்ப்பு நரம்பு ஊசியை போட்டுக்கொள்ள வேண்டும்.ஏனெனில்,நோய்க்கு எதிரான ஒரே மருந்து இதுவாகும்.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பானது கடந்த மார்ச் மாதம் பாரத் சீரம் நிறுவனத்தின் இந்த பூஞ்சை எதிர்ப்பு மருந்திற்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.