அதிகரிக்கும் கொரோனாவால் சிகரெட் விற்பனைக்கு தற்காலிக தடை – மும்பை ஐகோர்ட் பரிந்துரை!

நாட்டில் அதிகம் கொரோனா பரவல் காணப்படுவதால் சிகரெட் மற்றும் பீடிக்கு தற்காலிகமாக தடை விதிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. கொரோனாவால் புதிதாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிவேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்த மனு ஒன்றை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது. அப்பொழுது கடந்த ஆண்டில் புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவுக்கு பலியானதற்கான எண்ணிக்கை குறித்த ஏதேனும் தகவல் கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமடைந்தவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் எனும் சந்தேகமும் அதிகம் எழுந்துள்ளது.
கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்படையும் என ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சிகரெட் மற்றும் பீடிக்கு கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் தற்காலிகமாக தடை விதிக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.