“ஆடையை களைவது பாலியல் வன்கொடுமை அல்ல” அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு.!
பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்தநிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் வழங்கிய தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, “ஒரு பெண்ணின் ஆடையை களைவது, அவரது மார்பை பிடிப்பது அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது போன்ற செயல்கள் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியாக கருதப்படாது” என்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் கஸ்காஞ்ச் பகுதியில் 11 வயது சிறுமியை தாக்கி நிர்வாணப்படுத்த முயன்றபோது, சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள் காப்பாற்ற வரவும் இருவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். அந்த இருவர் மீதான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது.
அந்த தீர்ப்பில் ஒரு பெண்ணின் ஆடையைக் களைவது, அவரது மார்பில் கை வைப்பது போன்ற விஷயங்களை பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான ஆதாரங்களாகக் கருத முடியாது. போக்ஸோ வழக்கு விசாரணையின்போது, “பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகள் முழுமையாக களையப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. ஆகவே ‘பாலியல் வன்கொடுமை’ முயற்சிக்கு பதிலாக பாலியல் சீண்டல் என வழக்குப்பதிவு செய்யவும்” என்று கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அறிவுறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் இந்தச் செயல்களை “மோசமான பாலியல் தாக்குதல்” என்று வகைப்படுத்தினாலும், இவை பாலியல் வன்கொடுமை அல்லது அதற்கான முயற்சியாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுவதற்கு போதுமான ஆதாரமாக இல்லை என்று தீர்ப்பளித்தது. இந்த செயல்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்தைக் காட்டவில்லை என்றால், என்னவென்று கேள்வி கோபத்துடன் எழுப்பி பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
மேலும், இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நீதிபதியை உடனடியாக குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் ஒருவர் இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிபதியின் விளக்கம் தவறு
இந்தக் கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரு மூத்த வழக்கறிஞராகவும், ஒரு பெண்ணாகவும், இந்திய பெண்கள் சார்பாகவும் மிகுந்த வேதனையுடனும் கவலையுடனும் எழுதுகிறேன். ‘நீதிபதியின் விளக்கம் மிகவும் தவறானது’ என்று வழக்கறிஞர் குப்தா தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நீதிபதியின் அணுகுமுறை உணர்ச்சியற்றது, பொறுப்பற்றது மற்றும் அனைத்து வயது பெண்களுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு மிகவும் மோசமான செய்தியை சொல்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.