வாடிக்கையாளர்களிடம் 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி வசூல் செய்த எஸ்.பி.ஐ- ஏன் தெரியுமா ..?

மும்பை ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ உட்பட பல வங்கிகள் ஜீரோ பேலன்ஸ் அல்லது சேமிப்பு வங்கி வைப்புக் கணக்குகள் தொடர்பான சில சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இது ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறுவதாகும்.
மும்பை ஐ.ஐ.டி மேற்கொண்ட ஆய்வின் படி, இந்த கணக்குகளிலிருந்து குறிப்பிட்ட நான்கு முறைக்கு அதிகமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் எஸ்.பி.ஐ ரூ.17.70 வசூலிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. கடந்த 2015 முதல் 2020 வரை ஐந்து ஆண்டுகளில், எஸ்பிஐ அடிப்படை வங்கி டெபாசிட் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.300 கோடி சேவைக் கட்டணமாக வசூல்செய்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில், 2018-19 ஆம் ஆண்டில் ரூ.72 கோடி சேவைக் கட்டணமும், 2019-20-ல் ரூ .158 கோடியாகவும் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது. நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 3.9 கோடி வாடிக்கையாளா்களிடமிருந்து ரூ .9.9 கோடியையும் வசூலித்துள்ளது.