இந்தியாவில் விரைவில் அங்கீகாரம் – இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

As the Oxford AstraZeneca rehearsal is set to take place in India today, it is reported that recognition will be given in two more days.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் உருவாகிவந்த தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அங்கீகாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு இடங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இன்னும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், இந்தியாவில் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். இருப்பினும் இந்த கொரானா வைரஸை முழுவதுமாக ஒழிப்பதற்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல்வேறு ஆராய்ச்சி கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா கூட்டு தயாரிப்பில் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி வந்தது. இந்நிலையில் பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் இன்று மற்றும் நாளை இந்த கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற உள்ளதாகவும், ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்னும் அடுத்த சில நாட்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் – அஸ்ட்ராஜெனகா தயாரிப்பில் உருவாகிய தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என அரசின் உயர் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கூறிய மூத்த அதிகாரி ஒருவர், சீரம் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் திருப்திகரமாக தெரிவதாகவும், இங்கிலாந்து மற்றும் பிரேசில் மருத்துவ பரிசோதனைகளிலும் அதே தரவை நிறுவனம் சமர்ப்பித்து உள்ளதால், தொடர்ந்து மதிப்பாய்வு நடைபெற்று வருவதாகவும், ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இந்த தடுப்பூசி இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் என தாங்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்பு ஒழுங்குமுறை நிறுவனம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்- பர்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனகா மூலம் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பரிசீலித்து வருவதால் இங்கிலாந்திலும் அவசரகால பயன்பாட்டிற்கு இது அங்கீகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.