ஊழல்வாதிகள் யாரும் தப்பிவிட கூடாது.! சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி பேச்சு.!
ஊழல்வாதிகள் யாரும் தப்பிவிட கூடாது. ஊழலுக்கு எதிராக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மத்திய புலனாய்வு துறையான சிபிஐ (CBI) இந்தியாவில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு வைரவிழா ஆண்டை சிபிஐ கொண்டாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
சிபிஐ பொறுப்பு :
அப்போது அவர் பேசுகையில், தொழில்வளம் மற்றும் திறமையான நிறுவனங்கள் இல்லாமல் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை. அந்த வகையில் சிபிஐக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்று மோடி பேசினார்.
ஊழல்வாதிகள் தப்பக்கூடாது :
மேலும், ஜனநாயகம் மற்றும் நீதிக்கான மிகப்பெரிய தடையாக ஊழல் இருக்கிறது என்றும், ஊழலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே சிபிஐயின் முக்கியப் பொறுப்பு என்றும், ஊழல் செய்யும் ஊழல்வாதிகள் யாரும் தப்பி விடக்கூடாது இதுவே நாட்டு மக்களின் விருப்பம் என தெரிவித்தார்.
கருப்பு பணம் – பினாமி சொத்துக்கள் :
வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான குற்றங்கள் வரையில் சிபிஐயின் வேலையானது தற்போது விரிவடைந்துள்ளது. கறுப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள தொடங்கியுள்ளது என்றும், ஊழல்வாதிகளை தவிர, ஊழலுக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.