டெல்லி :இன்று இந்தியா முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில் நிறுவி வழிபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில், நாட்டில் உள்ள அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின விழா வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார். மேலும், ” கணபதி பாப்பா மோரியா” என குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பிரதமர் மோடி விநாயகரை வழிபடுவது போலவும், கடந்த கால விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களும் , மக்களின் வழிபாடுகளும் பதிவாகி இருந்தன.
unknown nodeஅதே போல, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைதள பக்கத்தில், “எனது நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான விநாயக சதுர்த்தி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கும் ஒன்றாக குதூகலத்துடன் கொண்டாடப்படும் இந்த விழா, சமூக ஆற்றலின் அழகிய உதாரணத்தை முன்வைக்கிறது.
நமது பாரம்பரியத்தில், ஸ்ரீ விநாயகர் மங்களகரமானவராகவும், தடைகளை நீக்குபவர்களாகவும் கருதப்படுகிறார். விநாயக சதுர்த்தியின் இந்த புனிதமான தருணத்தில், அனைவரையும் பேரழிவுகளிலிருந்து பாதுகாத்து செழிப்பைப் பரப்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
