வயநாடு நிலச்சரிவு : உயிரிழந்தோருக்கு 6 லட்சம்., காயமடைந்தோருக்கு 50 ஆயிரம்.! கேரள அரசு அறிவிப்பு.!

Wayanad Landslide - Kerala CM Pinarayi Vijayan

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 6 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் நிவாரண நிதி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் முண்டக்கை, மேப்பாடி,  சூரல்மலை ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த உறவுகளை இழந்து, வீடு உடைமைகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், இந்திய ராணுவத்தினர் தற்போதும் மீட்புப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் காணாமல் போன நிலையில் தான் இருக்கிறது. இந்த மீட்புப்பணிகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (ஆகஸ்ட் 14) நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.

இன்று திருவனந்தபுரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்க வேண்டிய நிவாரண நிதியுதவி பற்றிய விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு நிவாரண நிதி குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறிய தகவலை பார்க்கலாம்.

118 பேரைக் காணவில்லை…

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 233 பேரின் உடல்களும், 206 பேரின் உடல் உறுப்புகளும் மீட்புப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போன 118 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

நிவாரண நிதியுதவி :

அடுத்து நிவாரண நிதியுதவி பற்றி பினராயி விஜயன் அளித்த தகவலின்படி, நிலச்சரிவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 6 லட்ச ரூபாய் அளிக்கப்படும் என்றும், 60 சதவீதத்திற்கு மேல் உடலில் காயம் ஏற்பட்டவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும், 40 முதல் 50 சதவீதம் அளவுக்கு உடலில் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வாடகையாக 6 ஆயிரம் ரூபாய் :

மேலும், நிலச்சரிவால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் வசிப்பதற்கு இலவசமாகத் தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவதே அரசின் நோக்கம் என தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன், வாடகை வீட்டில் குடியேற உள்ள குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், உறவினர்கள் வீட்டில் தங்கும் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதி உதவித் தொகையானது முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் (CMDRF) இருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்