தீ விபத்தில் தப்பிய மகன்! மொட்டை அடித்து நன்றி தெரிவித்த பவன் கல்யாண் மனைவி
திருமலை கோயிலின் அன்னதானத் திட்டத்திற்கு 17 லட்சம் ரூபாய் நன்கொடையை ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா வழங்கியுள்ளார்.

ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருமலை வெங்கடேஸ்வரருக்கு நன்றி செலுத்த முடிவு செய்து சில விஷயங்களை செய்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 8 அன்று, சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் கை, கால்களில் காயம் ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகி இருந்தது.
பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனவே, அவர் பத்திரமாக உயிர் தப்பினார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை மறக்க முடியாத அன்னா, மகனின் உயிரைக் காத்த திருமலை வெங்கடேஸ்வரருக்கு நன்றி செலுத்த முடிவு செய்து ஏப்ரல் 13 அன்று, அவர் திருப்பதி கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக முதல் செயலாக, அன்னா தனது தலைமுடியை காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதியில் இது ஒரு முக்கியமான பழக்கம். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியபின், தங்களை அர்ப்பணிக்கும் விதமாக தங்களுடைய முடிகளை காணிக்கையாக வழங்குவார்கள். எனவே, அன்னாவின் இந்த செயல், மகனின் பாதுகாப்பிற்கு முழு மனதுடன் நன்றி செலுத்துவதற்கான ஒரு விஷயமாக இருந்தது.
தலை முடியை காணிக்கை செலுத்தியது மட்டுமின்றி, அன்னா கோயிலின் அன்னதானத் திட்டத்திற்கு 17 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். திருமலையில் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. அன்னாவின் இந்த நன்கொடை, பலரது பசியைப் போக்குவதற்கு உதவியாக இருக்கும். இந்த செயல் மூலம், தனது மகனின் உயிரைக் காத்த இறைவனுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் விதமாக நன்றி செலுத்தினார்.
அதோடு நிற்காமல், அன்னா கோயிலில் பக்தர்களுக்கு சேவை செய்யும் பணியிலும் ஈடுபட்டார். உணவு விநியோகம் போன்ற பணிகளில் பங்கேற்று, பக்தர்களுடன் இணைந்து வேலை செய்து நன்றியை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025